பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் பீகார் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. அதில் தற்போது ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், முதல்வர் நிதீஷ் குமார் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வெற்றிகரமாக ஆட்சி அமைத்தது.
ஆட்சி அமைத்த சிறிது காலத்திலேயே ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து இந்தக் கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தார். இதனால் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவுக்கும், நிதீஷ் குமாருக்கும் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக முடிவெடுத்து நிதீஷ் பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததாக சரத் யாதவ் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், கட்சியில் இருந்து விலக சரத் முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், கட்சியினரின் விருப்பத்தின் பேரிலேயே இம்முடிவை மேற்கொண்டதாகவும், சரத் யாதவ் தன் விருப்பம்போல் செயல்படலாம் என்று நிதீஷ் குமார் கூறினார்.
இந்நிலையில், சரத் யாதவ் பீகார் மாநிலம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். எதிர்கட்சியான லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சரத் யாதவை மாநிலங்களவை கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டது. ஆர்.பி.சிங் அக்கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதுதொடர்பான பரிந்துரை கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் ஐக்கிய ஜனதா தளம் அளித்தது.