பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் அவதி: அருண் ஜேட்லி

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் போதிய பணம் கிடைக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளதாக
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் அவதி: அருண் ஜேட்லி

மும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் போதிய பணம் கிடைக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மும்பையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பேசியதாவது:

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் போதிய பணம் கிடைக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு காஷ்மீரில் போராட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தெருக்களில் கூடுவார்கள். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் போராட்டத்துக்கு எதிர்ப்பாளர்கள் 25 பேர் கூட வருவதில்லை என்றும் எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள பிரிவினைவாதிகள், மாவோயிஸ்டுகள் போதிய நிதி கிடைக்காமல் அவதிபட்டு வருவதாக  ஜேட்லி கூறினார்.

மத்திய அரசின் இந்த திட்டத்தால், முன்னர் பொருளாதாரத்திற்கு வெளியே புழக்கத்தில் இருந்த பணம், தற்போது முறையான வங்கி நடைமுறைக்குள் வந்துள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

'புதிய இந்தியாவை' உருவாக்குவதற்கான பாஜகவின் பார்வையில், பாதுகாப்பு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கு அதிகளவில் செலவு செய்ய விரும்புகிறோம். "கோரக்பூர் சோகம் போன்ற வெட்கக்கேடான சம்பவங்கள்" மறுபடியும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால் உலக தரம் வாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட வேண்டும் என்றார்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 7 முதல் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் மட்டும் திருப்தி அடையவில்லை. நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் வகையில் 2014 முதல் எடுக்கப்பட்டு வரும் கடுமையான முடிவுகளை எடுப்பது தொடரும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான ஆட்சியின் பல சாதனைகளைப் பற்றியும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். அதில், கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் (ஜிஎஸ்டி), பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பினாமி சொத்து தடை, பினாமி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய சட்டங்களுக்கு தடை, நேர்மையான முறையில் இயற்கை வளங்கள் ஒதுக்கீடு, பல நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு தடை ஒப்பந்தம் போன்றவற்றை பட்டியலிட்டு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com