பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. நிகழாண்டுக்கான தீபத் திருவிழா சனிக்கிழமை (டிசம்பர் 2) நடைபெற்றது. இந்தத் திருவிழாவைக் காண பல லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை உச்சியில் சனிக்கிழமை (டிசம்பர் 2) மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்ற தேவையான கொப்பரையில் 3,500 கிலோ நெய், 11 ஆயிரம் மீட்டர் காடா துணி ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இதையடுத்து, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அச்சமயம் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.
முன்னதாக, திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் மொத்தம் 8,465 போலீஸார் ஈடுபட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தெரிவித்தார்.