இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் "ஸ்டென்ட்' உபகரணத்தின் விலை கடந்த வாரம் அதிரடியாகக் குறைக்கப்பட்டதை அடுத்து, அந்த உபகரணத்துக்காக நோயாளிகளிடம் கூடுதலாக வசூலித்த தொகையை மருத்துவமனைகள் திருப்பித் தர வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) தெரிவித்துள்ளது.
நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்னதாகவே நோயாளிகளுக்கு தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டால், மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த ஆணையம், தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஸ்டென்ட்' உபகரணம் பொருத்துவதற்காக, நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் விதிகளை மீறியது ஆய்வில் நிரூபணமானால், எச்சரிக்கை கடிதம் (டிமாண்ட் நோட்டீஸ்)அனுப்பப்பட்டு, மருத்துவமனைகளுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுட்டுரைப் பக்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹரியாணா, உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள இதய சிகிச்சை மருத்துவமனைகளில் "ஸ்டென்ட்' உபகரணம் பொருத்துவதற்காக, நோயாளிகளிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது என்று என்பிபிஏ ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கூடுதல் தொகை வசூலித்ததாக எழுந்த புகாரின் பேரில், தில்லி, சாகேத் நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை, ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் உள்ள நிதான் மருத்துவமனை ஆகியவற்றுக்கு அந்த ஆணையம் (என்பிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதவிர, தில்லி, மும்பை, ஃபரீதாபாத், பரேலி ஆகிய நகரங்களில் உள்ள சில மருத்துவமனைகளில் அந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் "ஸ்டென்ட்' உபகரணத்தின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த வாரம் அதிரடியாக 80 சதவீதம் வரை குறைத்தது. உலோகத்தால் ஆன ஸ்டென்ட் ஒன்றின் விலை ரூ.7,260-ஆகவும், "டிரக் எலூட்டிங் ஸ்டென்ட்' ஒன்றின் விலை ரூ.29,600-ஆகவும் குறைக்கப்பட்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.