போபால்: மத்திய பிரதேசத்தில் அமைதி திரும்ப வலியுறுத்தி அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், மண்ட்சவூர் என்ற இடத்தில் நடந்த விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. போராட்டம் தொடங்கிய மாண்ட்சவூர் பகுதியில் இன்று அமைதி திரும்பியுள்ள போதிலும், இந்த போராட்டம் தலைநகர் போபாலை நோக்கி பரவத் தொடங்கியுள்ளது.
ஷாஜபூர், தேவாஸ், இந்தூர், உஜ்ஜையினி, உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், மாநிலத்தில் அமைதி திரும்ப வலியுறுத்தி, போபாலில் உள்ள தசரா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் 65 சதவீத மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதாகவும், விவசாயிகளை விட்டுவிட்டு மாநிலம் வளர்ச்சியடைய முடியாது என்றும் தெரிவித்த சிவராஜ் சிங், மாநிலத்தில் அமைதி திரும்பும்வரை தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.