தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் துணை ராணுவப் படை வீரர்களின் சொந்த வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நிராகரித்துவிட்டது.
நாடு முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்). எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உள்ளிட்ட 8 துணை ராணுவப் படைகளில் 10 லட்சம் வீரர்கள் உள்ளனர். இவர்கள், தங்களது அடையாள அட்டையைக் காட்டினாலோ அல்லது அவர்கள் சீருடையில் வந்தாலோ, சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்குப் பதிலளித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
2008-ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படி, துணை ராணுவப் படை வீரர்களின் அலுவல் ரீதியான பயணங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டண வசூலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அந்தப் பயணத்தின்போது, அலுவல் ரீதியாக அந்த வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிசெய்வதற்கான ஆவணங்களை துணை ராணுவப் படை வீரர் சமர்ப்பித்தாக வேண்டும். அவ்வாறு இல்லாமல், தனிப்பட்ட முறையில் அவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.