
மும்பை: தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதை, புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஈடு செய்யும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 8.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 7 முதல் 8 சதவீதமாகக் குறையும் என்று இந்திய தகவல் தொழில்நுட்ப வர்த்த அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் உர்ஜித் படேல் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைவதாகக் கூறப்படுவது குறித்து நாம் சோர்வடையத் தேவையில்லை.
காரணம், நாட்டில் தொழில்முனைவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறையக்கூடிய வேலைவாய்ப்புகளை, புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஈடு செய்யும்.
கடந்த சில மாதங்களில் இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிஸன்ட், ஐபிஎம் மற்றும் டெக் மஹிந்த்ரா போன்ற பல ஐடி நிறுவனங்கள் அதிகமானவர்களை வெள்ளியேற்றி இருந்தாலும், தற்போது, ஐ.டி துறையில் 4 மில்லியனுக்கும் அதிகமானவார்கள் வேலை செய்துவருகின்றனர்.
ஒரு சில காரணங்களால் தகவல் தொழில்நுட்பத் துறையின் சில பிரிவுகள் பணியாளர்களைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அதைக் கொண்டு ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே வேலைவாய்ப்பு வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருத முடியாது.
வேலைவாய்ப்புகள் குறைவதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், தகவல் தொழில்நுட்பத் துறையினருடன் நான் பேசும்போது அவர்கள் கூறுவது அதற்கு முரணாக இருக்கிறது.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மின்னணுப் புரட்சியின் ஒரு அங்கமாகும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான அந்த வரி விதிப்பு முறை, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் தேசிய அளவிலான சந்தையை ஏற்படுத்தித் தரும்.
அதுமட்டுமன்றி, வரி விதிப்புக்குரிய பொருள்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதன் விளைவாக, இந்தியர்களின் ஒட்டுமொத்த வரிச்சுமை எதிர்காலத்தில் குறையும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.