

முந்தைய சமாஜவாதி கட்சி ஆட்சியின்போது அரசு அமைப்புகளில் நியமிக்கப்பட்ட அரசு சாரா அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக பதவி நீக்கம் செய்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதிக் கட்சி ஆட்சியின்போது, பல்வேறு அரசு அமைப்புகளிலும் ஆலோசகர், குழுத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அரசு சாரா 80 பேர் நியமிக்கப்பட்டனர்.
சமாஜவாதி கட்சிக்காரர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட இந்த 80 பேரும், மாநில அமைச்சர்களுக்கு இணையான சலுகைகளை அனுபவித்து வந்தனர்.
இந்தச் சூழலில், நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் முதல்வரின் ஆலோசகராக நியமனம் பெற்ற முன்னாள் தலைமைச் செயலர் அலோக் ரஞ்சன், உருது அகாதெமி தலைவர் நவாஸ் தேவ்பானி, மொழி வளர்ச்சிக் குழுத் தலைவர் கோபால் தாஸ் நீரஜ், ஹிந்தி வளர்ச்சிக் குழுத் தலைவர் உதய் பிரதாப் யாதவ் உள்பட 20 பேர் ராஜிநாமா செய்தனர். எனினும், மற்ற 60 பேர் தொடர்ந்து அவரவர் பதவியை வகித்து வந்தனர்.
இந்தச் சூழலில், முந்தைய அரசில் நியமனம் பெற்ற அரசு சாரா அதிகாரிகள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக நீக்கும்படி, புதிதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
சிறுபான்மையினர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம், பெண்கள் நல வாரியம் போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்து மாநில அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.