

செல்லாதவை என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வரும் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார். கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்த அவர், நியாயமான காரணங்களால் நோட்டுகளை மாற்ற இயலாதவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்றார். கூடுதல் அவகாச காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். ஆனால், அதன் பிறகு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மட்டுமே மார்ச் வரை ரிசர்வ் வங்கியில் பழைய நோட்டுகளை மாற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு செயல்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவித்தபோது சில விஷயங்களைக் கூறினார். டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பழைய நோட்டுக்களை மாற்றாததற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் மார்ச் 31 வரை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிலையில், டிசம்பருக்குப் பிறகு உள்நாட்டு மக்கள் எவரும் பழைய நோட்டுகளை மாற்ற இயலாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதேவேளையில், வெளிநாட்டினருக்கும், என்ஆர்ஐ-க்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விதிகளையும், வாக்குறுதிகளையும் அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே அறிவித்தபடி பொதுமக்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்காததற்கு காரணம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கமளிக்கும் வகையில், ஏப்ரல் 11-ஆம் தேதி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.