புதுதில்லி: ஊடகங்களைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன் முடிவுகளை ஜோதிடர்களும் கணிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தலின்போது 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் செய்திதாள், தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக் கணிப்போ, ஆய்வோ நடத்தக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
ஆனால், முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும்போதே, சில தொலைக்காட்சிகளில் வெற்றி வாய்ப்புகள் குறித்து, ஜோதிடர்களை வைத்து கணிப்புகளை வெளியிட்டன. இது குறித்து, தேர்தல் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், புகார்களை விசாரித்த தேர்தல் ஆணையம், ஜோதிடர்கள் தேர்தல் முன் முடிவுகளை கணிப்பதற்கு தடை விதித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், ”தேர்தலின்போது, கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு புரம்பானது. அப்படி வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.