

தில்லியில் லாரிகள் நுழையக் கூடாது என்ற உத்தரவு கடந்த 12-ஆம் தேதி இரவுடன் காலாவதியாகி, பின்னர் 14-ஆம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட நிலையில், இடைப்பட்ட நேரத்தில் நகருக்குள் சுமார் 60 ஆயிரம் லாரிகள் நுழைந்துள்ளன.
தில்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் நகரில் பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டது. கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை, அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வரும் லாரிகள் தவிர இதர லாரிகள் நகருக்குள் நுழையத் தடை என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
லாரிகள் நுழைவதற்கான தடை, நவ.9-ஆம் தேதி இரவு 11 மணி முதல் நவ.12-ஆம் தேதி இரவு 11 மணி வரை நீடிக்கும் என்று தில்லி அரசு அறிவித்தது.
இந்நிலையில், 12-ஆம் தேதி இரவு தடை உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து, அந்த உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா? இல்லையா? என்பதில் குழப்பம் உருவானது. அரசிடம் இருந்து எந்த உறுதியான தகவலும் கிடைக்கப் பெறாததால், நகருக்குள் லாரிகள் அனுமதிக்கப்பட்டன.
பின்னர், லாரிகள் நுழைவதற்கான தடை, அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தில்லி அரசு 14-ஆம் தேதி அறிவித்தது. இடைப்பட்ட நேரத்தில் நகருக்குள் சுமார் 60 ஆயிரம் லாரிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.