
கணினி திரை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி(ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 21-ஆவது அமர்வுக் கூட்டத்தில்,40 பொருள்களின் வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. வரி குறைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய விவரங்கள், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் (சிபிஇசி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
பிளாஸ்டிக் மழை அங்கிகள், ரப்பர் பாண்டுகள் ஆகியவற்றின் மீதான வரி முறையே 18, 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருள்களுக்கு முன்பு 28 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல், இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டி வரி, 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
20 அங்குல அளவிலான கணினி திரைகளுக்கான வரி, 28 சதவீத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 வரை விலையுள்ள பருத்தி மெத்தைகளுக்கு 5 சதவீத வரியும், அதற்கு அதிகமான விலையுள்ள பருத்தி படுக்கைகளுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படும். இதற்கு முன்பு இந்தப் பொருள்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது.
சமையலறை உபகரணங்கள், மற்ற வீட்டு உபயோகப் பொருள்கள், கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் பீங்கான் பொருள்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 18, 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
துடைப்பம், தூரிகைகள் (பிரஷ்) உள்ளிட்ட பொருள்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சமையலறை கேஸ் லைட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜெபமாலைக்கான வரி, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. காதி, கிராமத் தொழில் வாரியம் மூலமாக விற்பனை செய்யப்படும் கதர்த் துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.
உலோகத்தாலான ஓசையெழுப்பும் மணிகள், சிலைகள், ஆபரணங்கள் ஆகியவற்றுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.