நாசிக்: தான் பணியாற்றும் கிராமத்தில் எல்லோருடைய வீட்டிலும் கழிப்பறைகள் கட்டப்பட்ட பின்னர்தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்ற கிராம அலுவலர் ஒருவரின் வித்தியாசமான சபதம் நிறைவேறியுள்ளது.
மஹாரஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஹிவாரே என்ற கிராமத்தில் "கிராம சேவக்" என்னும் கிராம அலுவலராக பணியாற்றி வருபவர் கிஷோர்(26). இவருக்கு லத்தூர் மாவட்டத்தில் உள்ள இவருடைய சொந்த கிராமமான சங்கத்தில் இன்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்குப் பின்னால் இவரின் வித்தியாசமான சபதமொன்று அடங்கியுள்ளது. தான் பணியாற்றும் கிராமத்தில் எல்லோருடைய வீட்டிலும் கழிப்பறைகள் கட்டப்பட்ட பின்னர்தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்பதே அந்த சபதமாகும்.
இது தொடர்பாக நாசிக் மாவட்ட தகவல் அலுவலர் கிரண் மோகி தெரிவித்ததாவது:
கிஷோர் தனிப்பட்ட முறையில் பிரதம மந்திரி கொண்டு வந்திருந்த 'தூய்மை இந்தியா' திட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹிவாரே கிராமத்தில் மொத்தமுள்ள 351 வீடுகளில் 174 வீடுகளில் மட்டுமே கழிப்பறை கட்டப்பட்டிருந்தது.
இதனையறிந்த கிஷோர் 2014-ஆம் ஆண்டு நாசிக்கில் நடந்த மாவட்ட பஞசாயத்து அதிகாரியுடனான சந்திப்பு ஒன்றில், ஹிவாரேவில் மிச்சமுள்ள 177 வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்ட பின்னர்தான், தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்று உறுதி எடுத்தார்.
அவரது இந்த உறுதிமொழியினை அவர் கடந்த ஆண்டு பூர்த்தி செய்து விட்டார். நாசிக் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழு ஒன்று ஹிவாரே கிராமத்திற்கு வருகை புரிந்து ஒவ்வொரு வீடுகளையும் சோதனை செய்து இதனை உறுதி செய்தனர்.
இவ்வாறு கிரண் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கிஷோருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.