சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி உட்பட இரண்டு பேர் கொலை வழக்கில், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அலகாபாத்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி உட்பட இரண்டு பேர் கொலை வழக்கில், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமி ஆருஷி மற்றும் வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் ஆகியோர் கொலையை பெற்றோர்கள்தான் செய்தார்கள் என்பதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை. எனவே, சந்தேகத்தின் பலனை பெற்றோருக்கு அளித்து அவர்களை விடுதலை செய்வதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகளையும், வீட்டுப் பணியாளரையும் பெற்றோர் கொன்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் தம்பதி விடுவிக்கப்பட்டதால், சிறுமி ஆருஷியைக் கொன்றது யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இந்த இரட்டைக் கொலைகள் தொடர்பான வழக்கில் காஸியாபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், ராஜேஷ், நுபுர் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 

இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பால கிருஷ்ண நாராயணா, அரவிந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. 

வழக்கின் பின்னணி:

தில்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுர் தம்பதி. இவர்களது மகள் ஆருஷியும் (14), வீட்டுப் பணியாளர் ஹேம்ராஜும் கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டிலேயே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதில் ஆருஷியின் சடலம், தல்வார் தம்பதியின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஹேம்ராஜின் சடலம், வீட்டு மேல் கூரையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரையும் கொலை செய்தது யார் என்று மாநில போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இந்தக் கொலை வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, ஆருஷி உள்ளிட்ட 2 பேரையும் கொலை செய்ததாக ராஜேஷ், நுபுர் தம்பதியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 2013ம் ஆண்டு காசியாபாத் நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அன்று முதல் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் செய்த மேல்முறையீட்டு மனுவில், இருவரையும் விடுதலை செய்து இன்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com