குஜராத் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள லோடாய் என்ற கிராமத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கடல்சார் டைனோசாரின் முழு எலும்பு கண்டெடுக்கப்பட்டது.
பேலியோன்டாலாஜிஸ்ட்ஸ் (palaeontologists) குழுவினர் நடத்திய இந்த ஆய்வில் கடலில் வாழக்கூடிய டைனோசார் எலும்பு கண்டெடுக்கப்பட்டது. மேலும் இவ்வகை டைனோசார்கள் இந்திய கடலோரப் பகுதிகளில் காணப்பட்டதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது.
இவ்வகை டைனோசார்கள் 'இச்தியோசாரஸ்' (Ichthyosaurs) என்று அழைக்கப்படுகிறது. இவை சுமார் 5.5 மீட்டர் நீளமுள்ளவை. இது ஒரு சிறிய படகிற்குச் சமமானது.
சுமார் 1,500 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற அகழாய்வில் இந்த டைனோசாரின் எலும்புப் படிவம் முழுவதுமாக கிடைத்துள்ளது. இந்தியாவில் இதுபோல் ஒரு டைனோசாரின் எலும்புப் படிமம் கிடைப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இந்த வகை டைனோசார்கள் இந்திய கடலோரப் பகுதிகளில் சுமார் 165 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த எலும்பை வைத்து ஆராய்ச்சி செய்த போது அவை மிகவும் வலிமையானதாக இருந்தன. கடலில் மிகப்பெரிய வேட்டை விலங்காக வாழ்ந்துள்ளன.
தற்போது இருக்கும் திமிங்கலம், சுறா ஆகியவற்றை விட மிக ஆபத்தான மீன் இனமாக இருந்துள்ளது. வாய்ப்பகுதி பெரிதாகவும், பற்கள் கூர்மையாகவும் இருப்பது தெரியவந்தது.
முன்னதாக இந்தியாவில் ஆங்காங்கே டைனோசார்களின் சிறிய அளவிலான எலும்புக்கூடு, பற்கள் உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. அவை அனைத்தும் இந்த டைனோசாரை விட 50 மில்லியன் வருடங்கள் பின்னர் வாழ்ந்தவையாகும்.
இதன்மூலம் இந்திய - மடகாஸ்கர் (ஆப்பிரிக்கா) கடற்பகுதியின் தொடர்புகள் தெரியவரும். அதோடு இந்திய நிலப்பரப்பு உருவானது தொடர்பான சில தகவல்களும் அறிய வாய்ப்புள்ளது.