காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு மத்திய அரசு எந்தவகையிலும் அடிபணியக் கூடாது என முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்கான தந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்தில் 28 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதுபோன்று ம.ஜ.த.வுக்கு மக்களவையில் பலமிருந்தால் மாநில நலனுக்காகத் தொடர்ந்து போராடியிருப்போம்.
காவிரி விவகாரத்தில் மாநில நலனுக்காக ம.ஜ.த.வின் 2 உறுப்பினர்களும் ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளோம். காவிரி தொடர்பான தொடர் போராட்டத்தின் பலனாக மாநிலத்துக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாகக் கிடைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் 6 வாரத்துக்குள் காவிரி விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், 6 வாரத்துக்குள் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில், கால அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. இந்த நிலையில், 2 மாநிலங்களுக்கிடையே நட்புணர்வைப் பாதுகாக்க வேண்டும்.
பெங்களூரு உள்ளிட்ட காவிரி நதி நீர்ப் படுகையில் 3 கோடி பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் 14 டிஎம்சி தண்ணீரை அதிகமாக வழங்கியுள்ளபோதும், காவிரி விவகாரத்தில் மாநிலம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு நியாயமான தீர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









