புதுதில்லி: பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது
இந்நிலையில் பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் கூறியுள்ளதாவது:
கத்வா சம்பவத்தினால் மிகவும் வருத்தத்தில் உள்ளேன். அது மட்டுமல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வதாக பதிவாகும் வழக்குகளும் அதிர்ச்சி அளிக்கின்றன. எனவே ஏற்கனவே குழநதைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் பொருட்டு நடைமுறையிலிருக்கும் "போஸ்கோ" சட்டத்தில் திருத்தம் செய்து, பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர நானும் எனது அமைச்சகமும் பரிசீலனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழநதைகள் நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பேசும்பொழுது, 'இதுபற்றிய சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்டு வருகிறது. அது நிறைவடைந்ததும் சட்டத்துறைக்கு அனுப்பப்படும். தற்பொழுது நாடாளுமன்றம் செயல்படாததால், அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு யோசித்து வருகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும்' என்று தெரிவித்தார்.