யமுனா நதி தில்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களின் வழியாக செல்லக் கூடியது. இந்த யமுனா நதி நீரைத் தான் இவ்விரு பகுதி மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், யமுனா நதியில் இருந்து தங்களுக்கு ஹரியாணா அரசு போதிய நீர் வழங்குவதில்லை என்று தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 1996-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி யமுனா நதியில் இருந்து தில்லியன் தண்ணீர் தேவைகளுக்காக 450 கனஅடி நீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் ஹரியாணா அரசு வெறும் 330 கனஅடி நீரை மட்டுமே வழங்கி வருகிறது.
மேலும் தங்களின் சொந்த தேவைகளுக்கு யமுனா நதிநீர் போதவில்லை. எனவே இந்த அளவு நீர் தான் திறக்க இயலும் என்று ஹரியாணா அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதுகுறித்து தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் உள்ள நீரை உடனடியாக வழங்க வேண்டியும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மேலும் இரு மாநில தலைமைச் செயலர்களும் உடனடியாக மத்திய நீர்பாசனத்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.