லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் திருமணங்கள் நடத்த 3 மாதங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வரும் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன. அப்போது அதிகமான அளவில் மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். நாடு முழுவதிலும் இருந்து அந்த சமயத்தில் உத்தரபிரதேசத்தில் பெரும்பாலோர் கூடி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
இதன் காரணமாக விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழியும். அதே சமயத்தில் பொதுமக்கள் திருமணங்கள் நடத்தினால் திருமணத்திற்கு வரும் உற்வினர்கள் உள்ளிட்டவர்களால், இத்தகையோர் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும்.
இதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் திருமணங்கள் நடத்த ஜனவரி முதல் மார்ச் வரை மூன்று மாதங்களுக்கு தடை விதித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனவே மாவட்ட நிர்வாகங்கள் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் ஒரு அரசாணை அனுப்பியுள்ளது.
அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை உடனடியாக ரத்து செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.