பெங்களூரு: பெங்களூரு, மைசூர் மக்களுக்கு கன்னடமே பேசத் தெரியாது என்ற தனது கருத்தின் மூலம், மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய பாரதிய ஜனதா அரசில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சராக இருப்பவர் ஆனந்தகுமார் ஹெக்டே. அடிக்கடி தனது பேச்சுக்களின் மூலம் சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருபவர். இந்நிலையில் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள புட்டூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் சமீபத்தில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, " கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா மற்றும் ஷிவமோகா பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஒழுங்கான கன்னடம் பேசுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பேசுவது கன்னடம் அல்ல. இவ்வளவு ஏன், பெங்களூரு மற்றும் மைசூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கூட கன்னடத்தை ஒழுங்காக எப்படிப் பேசுவது என்பது தெரியாது" என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரது இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை உண்டாக்கி உள்ளது. பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மத்சசார்பற்ற ஜனதா தளம் இரண்டுமே இந்த பேச்சினை 'முட்டாள்தனமானது’ என்று விமசித்துள்ளன. அமைச்சருக்கு எதிராக கன்னட இயக்கங்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
எதிர்கட்சிகள் மட்டுமல்லாது அமைச்சரின் பேச்சுக்கு அவரது சொந்த கட்சியினைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் விரைவில் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து இத்தகைய பேச்சுகளினால் கட்சிக்குக் கெட்ட பெயரினை உண்டாக்கி வரும் ஆனந்தகுமார் மீது தேசியத் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் குரல்களும் ஒலிக்கின்றன.