மும்பை: அசைவ உணவு சாப்பிடுபவர்கள் தனியான தட்டு பயன்படுத்த வேண்டும் என்று ஐஐடி பாம்பேயின் விடுதி ஒன்றின் ஒருங்கிணைப்பாளர், மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள விவகாரம் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி பாம்பே கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு என பல்வேறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் விடுதி எண் 11-இல் தங்கியிருக்கும் சக மாணவர்களுக்கு, கடந்த 12-ஆம் தேதி அன்று விடுதி உணவக ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் மாணவர் ஒருவரிடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்தான் தற்பொழுது மாணவர்களை கொதிக்க வைத்துள்ளது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் தனியான தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற புகார் எனக்கு நிறைய மாணவர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. எனவே இனி அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள், இரவு உணவின் பொழுது அவர்களுக்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ள 'ட்ரே' வடிவத்தில் அமைந்துள்ள தட்டுகளை மட்டும் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் பிரதான தட்டுகளை பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சைவ உணவினை முக்கியத்துவப்படுத்தி அதற்கு என முக்கிய தட்டு என்று கூறுவது வலதுசாரி ஹிந்துத்துவ சிந்தனைகளை புகுத்தும் முயற்சி என்று பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ஐஐடி பாம்பேயின் மாணவர் விவகாரங்களுக்கான பிரிவுத் தலைவர் சவும்யோ முகர்ஜி, 'எல்லா விடுதிகளிலும் சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு என்று தனித்தனியே தட்டுகள் உள்ளன. இது முன்பிருந்தே பின்பற்றப்படுவதுதான். இப்பொழுது இதற்காக எதற்கு தனியான மின்னஞ்சல் என்று புரியவில்லை. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அதைவிடவும் மோசமானது' என்று தெரிவித்துள்ளார்.