

பாட்னா: பசி, வறுமை, கடினமான வேலை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிகார் இளைஞன், சிறையில் உணவு கிடைக்கும் என்பதற்காக 9 வயது சிறுவனைக் கொலை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஹர்சா மாவட்டம் சிக்னி டோலா கிராமத்தில் 9 வயது சிறுவனைக் கொலை செய்த குற்றத்துக்காக 17 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் நடத்திய விசாரணையில், மிகவும் கடினமான பணிகளை செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் தான், சிறைக்குச் சென்றால் உணவும் தங்குமிடமும் கிடைக்குமே என்பதால் கொலை செய்தேன் என்று கூறியிருப்பதாக காவலர்கள் கூறுகின்றனர்.
கூலித் தொழிலாளியின் மகனான அந்த இளைஞன், கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்துள்ளான். வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக தினமும் தொலைதூரம் சென்று வேலை செய்து வந்த நிலையில் அவனுக்கு தவறான யோசனை தோன்றியது.
யாரையாவது கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்றுவிட்டால் அங்கு உணவும், தங்குமிடமும் கிடைத்துவிடும் என்று கருதியே, வயலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கொலை செய்துள்ளான்.
இந்த சம்பவம் பிகார் மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாத ஒரு இளைஞன் எடுத்திருக்கும் மிக மோசமான முடிவு இது. இளைஞர்களின் மனநலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம். பணி வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்று மன நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.