காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீதான போர் நடவடிக்கை நிறுத்தம் நீடிக்குமா? - குழப்பத்தில் ராஜ்நாத் சிங்?

ரமலான் மாதத்தை முன்னிட்டு தற்காலிகமாக பயங்கரவாதிகள் மீது நிறுத்தப்பட்டுள்ள தாக்குதல் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ராஜ்நாத் சிங் இன்று அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீதான போர் நடவடிக்கை நிறுத்தம் நீடிக்குமா? - குழப்பத்தில் ராஜ்நாத் சிங்?
Published on
Updated on
2 min read

ரமலான் மாதத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவை பயங்கரவாதிகள் அவமதித்துள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மற்றும் நாளை அங்கு ஆய்வு செய்கிறார். 

இதற்காக இன்று காலை காஷ்மீருக்கு சென்ற ராஜ்நாத் சிங் அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, ஆளுநர் என்.என்.வோரா, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்தார்.

ரமலான் நோண்பு ஜூன் 15-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை அதன்பிறகு நீட்டிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதனால், இது குறித்தான தகவலை ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இந்த சந்திப்புக் கூட்டத்தில் பல கோணங்களில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ஜூன் 28-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதால் காஷ்மீரில் போர் நிறுத்த நடவடிக்கை உகந்ததாக இருக்காது என்றனர். ஆனால், அதேசமயம் மாநில அரசு போர் நிறுத்த நடவடிக்கையை நீட்டிக்கவே விரும்புகிறது. 

இது இப்படி இருக்க ராணுவ படையினர் சிலர், இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தம் பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்றிணைந்து ஒன்று சேர்வதற்கு உதவுது போல் இருப்பதாக தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். அதனால், இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஷ்மீர் காத்திருக்கிறது.    

இந்த சந்திப்புக்கு பிறகு ராஜ்நாத் சிங் இன்று மாலை மெஹபூபா முஃப்தியின் இப்தார் விருந்தில் பங்கேற்கவுள்ளார். ஆனால், இதைவிட  ராஜ்நாத் சிங்கின் மிக முக்கியமான அட்டவணையே பிரிவினைவாத தலைவர்களுடனான பேச்சுவார்த்தை தான். அனைத்து பிரிவினைவாதிகளுடன் பேசுவதற்கும் மத்திய அரசு தயாராக உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். 

பாஜகவின் தேசிய தலைவர் அண்மையில், பிரிவினைவாதிகள் இந்த பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ளதாக மாற்றி காஷ்மீர் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார். இந்நிலையில், ராஜ்நாத் சிங் இந்த பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார். 

இதுகுறித்து பிரிவினைவாதிகள் தெரிவிக்கையில், தெளிவான பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் இல்லையெனில் அது முடிவை தராது என்று கோரிக்கை வைத்திருந்தனர். காஷ்மீரை பிரச்சனைக்குரிய நிலமாக அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று ஐக்கிய ஜெஹாத் கௌன்சில் தெரிவித்திருந்தது.   

அதனால், இந்த பிரச்சனையில் ராஜ்நாத் சிங் அடுத்து என்ன அறிவிக்க இருக்கிறார் என்பதற்காக காஷ்மீர் மாநிலம் காத்திருக்கிறது. 

மே 16-இல் மத்திய அரசு போர் நிறுத்த நடவடிக்கை எடுத்த பிறகு பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்த பயணத்தின் போது ராஜ்நாத் சிங் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். 

2-ஆவது நாளில் சர்வதேச எல்லையில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தவுள்ளார். ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் நிலையில் ராஜ்நாத் சிங் இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com