கடந்த ஜனவரி 2-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் பீமா-கோரேகான் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும், 10 போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சுரேந்திர காட்லிங், சுதிர் தாவாலே, ரோனா ஜேக்கப் வில்சன், ஷோமா சென் மற்றும் மகேஷ் ரௌத் ஆகியோரை புணே போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் புணே நீதிமன்றம் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. இவர்கள் நக்ஸல்களுடன் தொடர்புடையவர்கள் என்று புணேவின் காவல் ஆணையர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே இது குறித்து கூறுகையில்,
"யால்கர் பரிஷத்துக்கும், பீமா கோரேகான் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேற்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அம்பேத்கரை பின்பற்றுவர்கள் என்றால் அவர்களை நக்ஸல்களாக கருத்தக்கூடாது. இந்த விஷயத்தில் சரியான விசாரணை நடத்த வேண்டும்.
இதுகுறித்து நான் முதல்வர் பட்னாவிஸிடம் பேசுகிறேன். நேற்று கைது செய்யப்பட்டவர்களுக்கு நக்ஸலுடன் தொடர்பு இல்லை என்றால் நிச்சயம் நான் அவர்களுக்கு உதவுவேன். அம்பேத்கரை பின்பற்றும் இளைஞர்கள் நக்ஸல் அமைப்புடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது" என்றார்.