ஜம்மு-காஷ்மீர் மக்களை பாஜக கைவிடாது: ராம் மாதவ்

ஜம்மு-காஷ்மீர் மக்களை பாஜக என்றும் கைவிடாது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ராம் மாதவ், வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மக்களை பாஜக கைவிடாது: ராம் மாதவ்
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மக்களை பாஜக என்றும் கைவிடாது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ராம் மாதவ், வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராம் மாதவ் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனையும், தேசத்தின் நலனையும் கருத்தில் கொண்டு தான் பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வந்த அரசியல் சூழல்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிரிவினைவாதிகளுடன் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒரே மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். ஆனால் அதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை அறிவித்தது. இருப்பினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு-வில் உள்ள லடாக் உள்ளிட்ட பகுதிகளில் சிறு அளவிலான நலத்திட்டங்களையே அமல்படுத்த முடிந்தது.

இங்கு கூட்டணியில் இருந்த பிடிபி கட்சி இவைகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டது. எனவே தான் இந்த கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தோம். 

இனி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக முழுமையாகப் பாடுபடும். இதற்காக நான்கு திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளோம். அவற்றில் முதன்மையானது பயங்கரவாதத்தை முற்றிலும் அழிப்பது. எனவே அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும். பாதியில் நிற்கும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் உடனடியாக முழுமைப்படுத்தப்படும். அனைவருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சரியாக கொண்டு சேர்க்கப்படும். இம்மாநில மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்க மாட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com