எமர்ஜென்சியின் போது எழுப்பப்பட்ட 'இந்திராவே இந்தியா-இந்தியாவே இந்திரா' என்ற காங்கிரஸ் கட்சியின் சுயப்பிரகடனத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 25 (இன்றைய தினம்) இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட தினம். இதனை அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா அறிவித்தார். குடியரசுத் தலைவருக்கு அவர் அளித்த அழுத்தம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது எதிர்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ஜூன் 25, 1975 தொடங்கி மார்ச் 21, 1977 வரை சுமார் 21 மாத காலகட்டத்துக்கு இந்தியாவில் எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்கு பின்பான இந்தியாவில் இது இருண்ட காலகட்டமாகவே இன்றளவும் அறியப்படுகிறது.
இந்த எமர்ஜென்சி காலகட்டத்தில் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே. பருவா, 'இந்திராவே இந்தியா-இந்தியாவே இந்திரா' என்று சுயப்பிரகடனப்படுத்திக் கொண்டார். மேலும் இந்த காலகட்டத்தில் ஜனநாயகத்துக்கு எதிராக அனைத்தையும் அடக்கும் விதமாக ஒடுக்குமுறையை ஏவியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், இந்த எமர்ஜென்சியை விமர்சிக்கும் விதமாக இன்றைய தினத்தை பாஜக இந்தியாவின் கறுப்பு தினமாக அனுசரித்து வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில்,
இந்திராவின் இந்த சுயப்பிரகடனத்துக்கு காங்கிரஸ் கட்சி இன்றுவரை மன்னிப்பு கோரவில்லை. ஹிந்துத்துவத்தை அறிந்தவர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் இது பாரத நாடு.
‘ஹிட்லா்தான் ஜொ்மனி’ என்ற கோஷம், நாஜிக்கள் மாநாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கோஷமே, ‘இந்திராதான் இந்தியா’ என்ற கோஷத்துக்கு உத்வேகமாக இருந்திருக்கக்கூடும் என்றார்.