மொத்தம் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 58 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் காலியாகும் இந்த இடங்களில் மொத்தம் 17 பாஜக மற்றும் 12 காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும் நியமன உறுப்பினர்களாக பதவியேற்றுள்ள நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சமூக ஆர்வலர் அனு அகா ஆகியோர் ஓய்வுபெறவுள்ளனர்.
இதையடுத்து 10 மாநிலங்களில் காலியாக உள்ள 33 இடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே மீதமுள்ள உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 25 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வெள்ளிக்கிழமை (மார்ச் 23) நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றிபெற்றவர்கள் இதே நாளில் அறிவிக்கப்படுவார்கள்.
இதில் ஆளும் பாஜக தரப்பில் தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள அருண் ஜேட்லி - உத்தரப்பிரதேசம், ஜே.பி.நட்டா - ஹிமாச்சலப்பிரதேசம், ரவி சங்கர் பிரசாத் - பிகார், தர்மேந்திர பிரதான் மற்றும் தவார் சந்த் கேலோட் - மத்தியப்பிரதேசம், மன்ஷுக் எல்.மந்தவ்யா மற்றும் பர்ஷோத்தம் ரூபாலா - குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போட்டியிடுகின்றனர்.