புதுதில்லி: உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவின் படி காவிரி நீர் பங்கீட்டுக்கு வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாரித்து விட்டதாக நீர்வளத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவிரி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்த இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அப்பொழுது மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், மே 3 -ஆம் தேதியன்று காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டம் ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவின் படி காவிரி நீர் பங்கீட்டு வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாரித்து விட்டதாக நீர்வளத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:
காவிரி நதிநீரை மாநிலங்களிடையே பங்கீடு செய்து கொள்வதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைவுத் திட்டம் தயாராகி விட்டது. அந்த வரைவு திட்டத்தின் முழு விபரங்களும் மத்திய அமைச்சரவையிடம் விரைவில் ஒப்டைக்கப்படும்.
இந்த திட்டத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியம் மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதன் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது நதிநீர் தொழில்நுட்ப நிபுணர் இருப்பார். 9 உறுப்பினர்களில் தலைவர் உள்பட 5 பேர் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மீதமுள்ள 4 உறுப்பினர்களும் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்த 4 உறுப்பினர்களும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். அந்த பகுதி நேர உறுப்பினர்களும் ஆண்டு தோறும் மாறி கொண்டே இருப்பார்கள்.
நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகம் தயாரித்தாலும் அதை அமல்படுத்தும் முழு பொறுப்பையும் உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்து, செயல்படுத்துமாறு கேட்க உள்ளோம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்