பாட்னா: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கி ராஞ்சி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாலு பிரசாத் மூத்த மகனும், பிகார் எம்எல்ஏவும், அந்த மாநில முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களின் திருமணம் வரும் 12-ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் லாலுவால் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில், திருமணத்தில் பங்கேற்பதற்கு 3 நாள் பரோல் கோரி அவரது சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் திருமணத்தில் பங்கேற்பதற்காக, ராஞ்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு, கடும் நிபந்தனைகளுடன் மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், லாலுவின் உடல் நிலை மோசமாக இருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரி அவரது தரப்பில் ராஞ்சி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ராஞ்சி உயர்நீதிமன்றம் லாலுவுக்கு 6 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.