ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றத்தை ஏற்படுத்தி கொள்வதற்கு உச்சநீதிமன்றம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பகுதி பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக கடந்த 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதையடுத்து, தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் இருக்கும் உயர்நீதிமன்றமே, ஆந்திரத்துக்கும், தெலங்கானாவுக்கும் பொதுவானதாக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய ஹைதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி செங்குப்தா அளித்த தீர்ப்பு ஒன்றில், ஆந்திர உயர்நீதிமன்ற கட்டடம், ஆந்திர மாநில பகுதியிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர அரசின் சார்பில், உயர்நீதிமன்றத்துக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் கட்டடம் டிசம்பர் 15க்குள் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ஆந்திர உயர்நீதிமன்றம் தனித்து செயல்படுவது தொடர்பான அறிவிக்கை 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் தயாராகி விடும் என எதிர்பார்க்கிறோம். அப்படி வெளியிடப்பட்டால், ஆந்திரம், தெலங்கானா உயர்நீதிமன்றங்கள் தனித்தனியாக செயல்படும். ஆந்திர உயர்நீதிமன்றமும் புதிய கட்டடத்தில் முன்கூட்டியே செயல்பட தொடங்கும் என்றனர்.
இதன்படி, ஆந்திரத்துக்கு தனியாக உயர்நீதிமன்றம் உதயமாகும்பட்சத்தில், அது 25ஆவது உயர்நீதிமன்றம் என்ற பெருமையை பெறும். அமராவதியில் அமைக்கப்படும் நீதி நகரத்தில் நிரந்தரமாக புதிய கட்டடம் கட்டப்படும் வரையில், அது தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







