நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம்: துவங்கி வைத்த பிரதமர் மோடி
புது தில்லி: நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தில்லியில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
சேலம்-கோவை உட்பட நாடு முழுவதும் நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு தில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் உள் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த திட்டம் முதல் படியாக விளங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் தற்போதைய பயனாளர்களில் 70 சதவீதம் மக்கள் பயன்பெறக் கூடிய நிலை உருவாகும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க எரிசக்திக்கான தேவையும் அதே அளவுக்கு உயர்கிறது. எனவே சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதன்காரணமாக இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு வரை 66 மாவட்டங்களில் மட்டும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது 174 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சம் 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 400 ஆக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.