திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீரில் தத்தளித்தவர்களை விமானம் மூலம் மீட்கவும், உணவு தானியங்களை வழங்கியதற்கும் ரூ.291 கோடியை கட்டணமாகக் கேட்டுள்ளது மத்திய அரசு.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் கன மழையைத் தொடர்ந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது வழங்கப்பட்ட விமான சேவை மற்றும் உணவு தானிய வழங்கல் பணிக்காக மத்திய அரசு ரூ.291.74 கோடியை கட்டணமாகக் கேட்டுள்ளது.
இந்த தகவலை, கேரள சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மேலும், மாநில பேரிடர் மீட்பு நிதியாக ரூ.987.73 கோடி இருந்ததாகவும், இதில் இருந்து வெள்ள மீட்புப் பணிகளுக்காக ரூ.586.04 கோடி செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மாநில அரசுக்கு இருக்கும் கடன்களை செலுத்த உடனடியாக ரூ.706.74 கோடி தேவைப்படுவதாகவும், இதில் மத்திய அரசு விதித்திருக்கும் ரூ.290.74 கோடியும் அடங்கும். இதில் விமானத்தைப் பயன்படுத்தியதற்காக மட்டும் ரூ.33.79 கோடி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பேரிடர் மீட்பு நிதியில் இருந்து தற்போது தேவைப்படும் செலவை செய்துவிட்டாலும், கடன்களை அடைக்க அதிகளவில் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
முதல்வரின் பேரிடர் மேலாண்மை நிதிக்கு ரூ.2,683.16 கோடி பணம் நன்கொடை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கிடைத்திருப்பதாகவும், அதில்எஇருந்து தற்போது வரை ரூ.688.48 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.