இஸ்ரோ ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக கூறப்படும் விவாகரத்தில் தாம் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறியுள்ளார்.
மேலும், அந்த விவகாரத்தில் கூட்டுச் சதியில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு நபர்கள் என்றும், ஆனால் பாதிக்கப்பட்டது ஒரே தரப்பினர் என்றும் நாராயணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நம்பி நாராயணன் எழுதி சமீபத்தில் வெளியான, "ரெடி டூ ஃபயர்: ஹெüவ் இந்தியா அன்ட் ஐ சர்வைவ்டு தி இஸ்ரோ ஸ்பை கேஸ்' என்ற புத்தகத்தில் அவர் கூறியிருந்ததாவது:
என்னைப் பொருத்த வரையில், மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா கைது செய்யப்பட்டது முதல் (அக்.20, 1994) இஸ்ரோ உளவு வழக்கானது பொய்யான ஒன்றாகும். அவரது கைது நடவடிக்கையே இந்த விவகாரத்தின் தொடக்கம் என்று கூறப்பட்டாலும், 1994-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி ரஷிய விண்வெளி அமைப்புக்கான இந்தியப் பிரதிநிதி கே. சந்திரசேகரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மரியம் சந்தித்தபோதே இந்த விவகாரம் தொடங்கிவிட்டது.
இஸ்ரோ உளவு வழக்கானது, வழக்கத்துக்கு மாறான ஒன்றாகும். ஏனெனில், இந்த விவகாரத்தில் சதியில் ஈடுபட்டிருந்தது வெவ்வேறு நபர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன. ஆனால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே தரப்பினராக இருந்தனர். மரியம் ரஷீதாவின் டைரியில் அப்போதைய இஸ்ரோ கிரையோஜெனிக் திட்ட துணை இயக்குநராக இருந்த சசிகுமரனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்த பிறகே, இந்த விவகாரத்தில் இஸ்ரோவும் இழுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் முக்கிய சதிகாரராக இருந்த நபர், தனது நடவடிக்கைகளை குறைத்துக் கொண்ட சூழலில், நான் பகடைக்காயாக ஆக்கப்பட்டேன். அந்த சூழலில் இந்தியா செயற்கைக்கோள்களை ஏவுவதில் உலகளாவிய சந்தையாக உருமாறும் நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது எழுந்த இஸ்ரோ உளவு விவகாரம், கிரையோஜெனிக் எஞ்ஜின் மேம்பாடு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை சுமார் பதினைந்தாண்டுகளுக்கு தாமதப்படுத்திவிட்டது. அதன் மூலமாக கிடைத்த ஒரே பலன், ஒரு செயற்கைகோள் ஏவுவதற்கு நாசா வசூலிக்கும் கட்டணத்தில் ஒரு சிறிய பகுதியையே வசூலிக்கும் அளவுக்கு இஸ்ரோ மேம்பட்டுள்ளது என்று நம்பி நாராயணன் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
இஸ்ரோ ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக கடந்த 1994-இல் கேரள காவல்துறையால் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டபோது, அவர் மீதான நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி அவர் விடுவிக்கப்பட்டார். பொய்யான குற்றச்சாட்டால் அவர் மன உளைச்சல் அடைந்ததால், அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.