பெங்களூரு: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய செயலரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மூன்று மாத காலம் அவகாசம் கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இந்த அவகாசம் என்றுகருதப்படுகிறது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேசிய செயலரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான முரளிதர் ராவ் திங்களன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து பாஜகவின் கர்நாடக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கபப்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.