புதுதில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பிகாரில் பாஜக சார்பில் ராஷ்டீரிய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியை எதிர்த்து போட்டியிட்டு ராஜீவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு பெற்றார்.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் திறன் வளர்ச்சி துறைக்கான தனி பொறுப்பு அமைச்சரானார். தொடர்ந்து நடந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் இவரிடம் இருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர்.
இந்நிலையில், கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்துள்ளது.
பாஜக தேசி செய்தி தொடர்பாளராக நியமனம் செய்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தனது டிவிட்டர் பக்க பதிவில் நன்றி தெரிவித்துள்ளார் ராஜீவ் பிரதாப் ரூடி.