புது தில்லி: தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர எஸ். ராத்தோர் தலைமையிலான அமர்வில் அக்டோபர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு, தி டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரிசர்ச் அமைப்பு உள்ளிட்டவை வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர எஸ். ராத்தோர் தலைமையிலான அமர்வில் அக்டோபர் 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர். ராகேஷ் சர்மா உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்தனர்.
அதில் இத்திட்டத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதை மட்டும் தமிழகம் செய்து வருகிறது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில் தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.