லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு: சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரம்  பறிப்பு 

லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு: சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரம்  பறிப்பு 

லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரங்களை பறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புது தில்லி: லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரங்களை பறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிபிஐ சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவில் சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் இடம்பெற்றிருந்தார். மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, மொயின் குரேஷியின் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த இடைத் தரகர் மனோஜ் பிரசாத் என்பவரை சிபிஐ கைது செய்து விசாரித்தது. அப்போது அவர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு அஸ்தானாவுக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில், சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா, தேவேந்தர் குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. முன்னதாக, சனாவை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அஸ்தானா கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். தற்போது அதே லஞ்ச குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை சிபிஐ திங்கள்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளது. 

இதனையடுத்து லஞ்சம் பெற்றதாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்த பொழுது அஸ்தானாவின் மனுவினை ஏற்க இயலாது; சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

விசாரணை அறிக்கையை வரும் திங்களன்று (29.10.18) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றமானது, அதுவரை இந்த வழக்கில் அஸ்தானாவைக் கைது செய்ய தடை விதித்துள்ளது.   

இந்நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரங்களை பறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அவர் இதுவரை விசாரித்து வந்த அகஸ்டா வெஸ்ட்லான்ட் மற்றும் விஜய் மல்லையா உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா  தனது பொறுப்பிலேயே எடுத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com