2020, ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்: என்னவெல்லாம் கேட்கப்படலாம்?

நாடு முழுவதும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது.
2020, ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்: என்னவெல்லாம் கேட்கப்படலாம்?
Published on
Updated on
1 min read

புது தில்லி: நாடு முழுவதும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 2020ம் ஆண்டு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு வீடாக கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், முதல் முறையாக இந்த மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியின் போது, பொதுமக்களிடம் இருந்து புதிய பல தகவல்களை மத்திய அரசு கேட்டுப் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது, வீட்டில் டிடிஎச் அல்லது கேபிள் டிவி இணைப்பு இருக்கிறதா? எத்தனை பேரிடம் ஸ்மார்ட் ஃபோன் உள்ளது? இணையதள சேவை இருக்கிறதா? ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு வங்கிக் கணக்கு உள்ளது? என்ற தகவல்கள் உட்பட இன்னும் சில தகவல்களும் கேட்டுப் பெறப்பட உள்ளதாம். அதிலும், இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் செல்போன் எண்ணும் பதிவு செய்யப்பட உள்ளது.

அதே சமயம் 2011ல் நடத்தப்பட்டது போலவே மக்களின் சாதி பற்றி விவரம் இதிலும் கேட்கப்படாது என்றும், இந்தியாவில் உள்ள சுமார் 40 லட்சம் சாதிப் பெயர்களையும் பட்டியலிடுவது சிரமமாக இருக்கும் என்பதால் அதனை தவிர்ப்பதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்காக நாடு முழுவதும் 1,800 மூத்த பயிற்சியாளர்கள், 90 தேசிய பயிற்சியாளர்கள் என 31 லட்சம் பேர் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com