புது தில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவையில் தற்போது அதன்மீது விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர் செவ்வாயன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மாநில சட்டசபையில் முறையான ஒப்புதல் பெறாமல் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று அவர் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று முறையிடுவார் எனத் தெரிகிறது.