புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் தில்லியில் புதனன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜுக்கு நேற்றிரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்தார்.
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு தில்லி லோதி சாலையில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.