புது தில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளுக்கு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்த சுமார் 12க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
2019ம் ஆண்டு மே மாதம் முற்றிலும் மூடப்பட்டு இருந்த இந்த முகாம்களில் தற்போது ஆட்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கோட்லி, ரவால்கோட், பாக் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களின் அருகே இந்திய பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசும் போது, இந்தியாவில் புல்வாமா போன்ற அல்லது அதைவிட மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று கூறியிருந்தார்.
இம்ரான் கான் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் வாய்மொழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த முழு சுதந்திரம் அளித்திருப்பதாககே கருதப்படுகிறது.
இந்திய எல்லையோரப் பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களில் சுமார் 150 பயங்கரவாதிகள் எந்நேரமும் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
கடந்த வாரத்தின் துவக்கத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.