திகார் சிறைச்சாலையை 'டேட்டிங் ஸ்பாட்' ஆக மாற்றிய காதலி! அரண்டு போன காவல்துறை..

திகார் சிறை வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் உச்ச கட்ட பாதுகாப்பையும் மீறி பெண் ஒருவர் சிறையில் உள்ள தனது காதலரை சந்தித்து பேசியுள்ளார்.
திகார் சிறைச்சாலையை 'டேட்டிங் ஸ்பாட்' ஆக மாற்றிய காதலி! அரண்டு போன காவல்துறை..
Updated on
2 min read

திகார் சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி போடப்பட்ட 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, பெண் ஒருவர் சிறைச்சாலையின் உள்ளே சென்று, தனது காதலரை சந்தித்து பேசியுள்ள சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

தில்லியின் மேற்குப் பகுதியில் உள்ள திகார் சிறை தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய சிறை ஆகும். சுமார் 53 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த சிறையில் தற்போது 12,000 கைதிகள் உள்ளதாக தகவல். பரப்பளவு பெரிது என்பதால் பாதுகாப்பும் பலமாகவே இருக்கும். பார்வையாளர்கள் நேரம் வெறும் அரை மணி நேரம் தான். ஒரே நேரத்தில் 50 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கைதிகளுக்கும், பார்வையாளருக்கும் இடையே, இடைவெளி அதிகமாக தான் இருக்கும். எனவே, பார்வையாளர்கள் இடம் கூச்சலும், குழப்பமுமாக இருக்கும்.

சிறை வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையினரும், டெல்லி மாநில போலீசாரும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருப்பர். இப்படிப்பட்ட ஒரு உச்ச கட்ட பாதுகாப்பையும் மீறி பெண் ஒருவர் சிறையில் உள்ள தனது காதலரை சந்தித்து பேசியுள்ளார். 

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திகார் சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக கைதியாக இருப்பவர் ஹேமந்த். இவரின் நன்னடத்தை காரணமாகவும், படித்தவர் என்பதால் அவருக்கு மத்திய சிறைச்சாலை எண். 2ல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலை கொடுக்கப்பட்டிருந்தது. சூப்பிரண்டன்ட் ராம் மெஹருக்கு ஹேமந்த்தின் மீது நம்பிக்கை ஏற்படவே, அவரை சுதந்திரமாக வேலை செய்ய விட்டுள்ளார். ஆனால், அலுவலக வேலைக்காக கொடுத்த கணினியை, அவர் தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். இணையத்தின் வாயிலாக தனது காதலியிடம் உரையாடியுள்ளார். மேலும், காதலியை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டு, அவரை சிறைக்கு வரவழைத்துள்ளார்.

ஹேமந்த்தின் காதலியான அந்தப் பெண், தான் என்.ஜி.ஓ நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, போலியான ஆவணங்களுடன் சிறை அலுவலரின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்துள்ளார். தொடர்ந்து நான்கு நாட்களாக அவர் சிறைக்குள் வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் என்பதை வைத்து காதலரையும் சந்தித்து பேசிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்த பெண், தொடர்ந்து வந்ததால், சந்தேகத்தில் விசாரித்த போலீசாருக்கு  உண்மை தெரிய வந்தது. 

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைத்து சிறைத்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். 

மேலும், வி.ஐ.பி குற்றவாளிகள் இருக்கும் சிறை என்பதால்,ஹேமந்த் உபயோகித்த கணினியில் இருந்து முக்கியத் தகவல்கள் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com