சுதந்திர தினத்தோடு இன்று ரக்ஷா பந்தன் கொண்டப்படுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் ராக்கி கட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில், கடந்த 24 ஆண்டுகளாக தவறாமல் ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர் ராக்கி கயிறு கட்டி வருகிறார்.
பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது அகமதாபாத்தில் வசித்து வருகிறார்.
இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதையொட்டி, இவர், பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தனது கணவர் வரைந்த ஒரு ஓவியத்தையும் மோடிக்கு பரிசாக அளித்துள்ளார். அவர் அளித்த ஓவியத்தில் மோடி புகைப்படத்தின் பின்னணியில் கோள்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் மொஹ்சின் ஷேக்.
இதுகுறித்து இன்று அவர் பேசும்போது, 'ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் அன்று எனது சகோதரர் மோடி அவர்களுக்கு ராக்கி கட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருக்கும் போது முதல்முறையாக அவரை சந்தித்தேன். அப்போதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் அவரை தவறாமல் சந்தித்து வருகிறேன். நாட்டிற்காக அவர் செய்யும் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பாக தொடர வேண்டும் என்றும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், ஏராளமான குழந்தைகளும் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டினர். சில மாற்றுத்திறனாளிகள் வந்திருந்த நிலையில், பிரதமர் மோடியே அவர்களது அருகில் சென்று ராக்கி கட்டிக்கொண்டார்.