புது தில்லி: ஜம்மு காஷ்மீருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும்? என்று மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மனுத்தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை அரைமணி நேரமாக படித்துப் பார்த்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக 6 மனுக்களிலும் குறைகள் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
மேலும், 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் உங்களுக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஷர்மாவிடம் ரஞ்சன் கோகோய் கேள்வி எழுப்பினார்.
விசாரணையின் போது, ஒரு ஆங்கில இதழின் சார்பில், காஷ்மீரில் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்குமாறு கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், காஷ்மீரில் எந்த பத்திரிகைகளும் முடக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
அதே சமயம், காஷ்மீரில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கவும் உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.