எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஜம்மு-காஷ்மீர் செல்வதற்கு முன்பு சற்று யோசித்திருக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் செல்வதற்கு முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் சற்று யோசித்திருக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் ஆளும் மத்திய பாஜக அரசுக்கும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கும் அரசியல் செய்ய இடமளித்துள்ளனர்.
அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுவது தான் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதான கொள்கை. அம்பேத்கர் எப்போதுமே சமத்துவத்தை விரும்பியவர். ஆதலால் தான் அவர் ஜம்மு-காஷ்மீருக்கு 370 சிறப்பு சட்டப்பிரிவு ஏற்படுத்த மறுப்பு தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் எதிர்ப்பும் தெரிவித்தார்.
அதனால் தான் பகுஜன் சமாஜ் கட்சியும் மத்திய அரசின் இம்முடிவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்தது. சுமார் 69 ஆண்டுகளாக அமலில் இருந்த சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலை திரும்ப மேலும் சில காலம் ஆகும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் என்று தெரிவித்தார்.