அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) இறுதிப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதன் வரைவுப் பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். எனவே இதில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
என்ஆர்சி இறுதிப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. இதை ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
அதன்படி, என்ஆர்சி இறுதிப் பட்டியல் சனிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதிலிருந்து 19 லட்சம் (19,06,657) பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. முன்னதாக, மொத்தம் 3,30,27,661 பேர் தங்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர்.
இறுதிப் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை, இணையதளத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெயர்களைச் சரிபார்ப்பதற்கான வழிமுறைகளையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது.