வெங்காய விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதுமே வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100-யைத் தாண்டியுள்ளது. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வெங்காயம் மற்றும் பருப்புகளின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே எம்.பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர். 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர், புதன்கிழமை சிறையில் இருந்து விடுதலையான மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி ஏழைகளை துன்புறுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்ற பதாகைகளுடன், எம்.பிக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், 'நாடாளுமன்றத்தில் எனது குரலை யாரும் அடக்க முடியாது' என்று கூறினார்.