கர்நாடக இடைத்தேர்தல் எதிரொலி: காங்கிரஸ் மாநிலத் தலைவரும் ராஜிநாமா!

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 15 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அம்மாநில பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுவிடும். அப்படி இருக்கையில் அக்கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்று, மேற்கொண்டு 1 தொகுதியில் முன்னிலை வகிப்பது மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இதன்மூலம், கர்நாடகத்தில் எடியூரப்பா ஆட்சியைத் தக்கவைத்துள்ளார்.

இதையடுத்து, தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்தார். அவரைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ்வும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். கட்சித் தாவியவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என காங்கிரஸ் நினைத்தது. இருப்பினும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆபரேஷன் கமலா மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரைச் சந்தித்து, இடைத்தேர்தல் தோல்வி குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com