புது தில்லி: மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு 293 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த மசோதாவுக்கு 82 பேர் எதிராக வாக்களித்தனர்.
அதிமுக எம்.பி.க்கள் உட்பட 293 எம்.பி.க்கள் மக்களவையில் இன்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்காக ஆதரவாக வாக்களித்தனர்.
முன்னதாக மக்களவையில் இன்று மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எந்த மதத்தினருக்கும், சிறுபான்மையினருக்கும் 0.001 சதவீத அளவு கூட எதிரானது அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த மசோதாவின் மூலம் மத ரீதியிலான பாகுபாடுகள் களையப்படும். மசோதா மூலம் 1.75 கோடி மக்கள் பயனடைவார்கள். இந்த சட்டத் திருத்த மசோதா தொடர்பாக எம்பிக்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார் என்று கூறினார்.