மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒருநாள் தொடருக்கு காயத்தில் இருந்து மீளாத ஷிகர் தவனுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன், மகாராஷ்டிரத்துக்கு எதிரான சையது முஷ்டாக் அலி டி20 ஆட்டத்தில் இடது முட்டியில் பலத்த காயமடைந்தார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இருந்து அவர் விலகினார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுடனான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால், இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பும் ஷிகர் தவன் காயத்தில் இருந்து முழுமையாக மீள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருடைய காயம் முன்பு கணித்ததைவிட சற்று மோசமாக இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அணி நிர்வாகத்துடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஷிகர் தவனுக்குப் பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வாலின் பெயரை தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது பெயரையும் தேர்வுக் குழு பரிசீலித்தது.
ஆனால், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அகர்வாலின் பேட்டிங் சராசரி 50-க்கும் மேல் உள்ளது, ஸ்டிரைக் ரேட் 100-க்கு மேல் உள்ளது, 13 சதங்கள் அடித்துள்ளார் என்பதால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அகர்வாலை முயற்சி செய்து பார்க்கலாம் என அணி நிர்வாகம் கருதியது" என்றார்.
இந்தத் தொடரில் மற்றொரு கர்நாடக வீரரான கேஎல் ராகுலும் அணியில் இடம்பிடித்திருப்பதால், ரோஹித் சர்மாவுடன் இணைந்து அவரே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதுவும் ராகுல் தற்போது சையது முஷ்டாக் அலி மற்றும் டி20 தொடர் என பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். எனவே, மயங்க் அகர்வால் இந்திய அணியில் இடம்பிடித்தாலும் விளையாடும் லெவனில் இடம்பிடிப்பதற்கு காத்திருக்க வேண்டிய நிலையே ஏற்படும் எனத் தெரிகிறது.